இதன் நோக்கம் பெண்களின் உரிமை பற்றி விவாதிப்பது அன்று. எனக்கு தெரிந்த எதிர்கொண்ட சில தகவல்களைப் பகிர்ந்துக் கொள்வதே.......ஏதும் பிழை இருந்தால் சுட்டிக் காட்டி மன்னிக்கவும்...
தன் காதல் மனைவிக்காக "தாஜ்மஹால்" கட்டியவன் என்று இன்றளவும் புகழ் மகுடம் சூடிக்கொண்டிருக்கிறான் ஷாஜஹான். ஆனால் அவன் மனைவி வருடம் தவறாமல் குழந்தை பெற்று ஜன்னி கண்டு உடல் வெளிறியது நமக்கு தெரியுமா ? இது தெரிந்திருந்தால் ஷாஜஹான் செய்தது சிறிய கைம்மாறு என்றே வைத்துக் கொள்ளலாம்.ஆனால் புகழ் அவனுக்கு மட்டுமே....
ராமரின் மனைவி சீதையை கவர்ந்து சென்ற ராவணனிடம் போர் கொண்டு சீதையை மீட்டு வர ராமருடன் இலக்குமணன் சென்றதாக இதிகாசம் சொல்கிறது.ஆனால் 12 வருடம் இலக்குமனை பிரிந்த அவனது மனைவியின் நிலையை பற்றி நமக்கு தெரிய வைத்ததா இதிகாசம் ?
மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேர் என்பது நமக்கு தெரியும். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு அவர்களுக்கு துச்சலை என்கிற தங்கை இருந்தாள் என்பது தெரியும்??
இயேசு முதல் பாரதி வரை பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்தவர்கள் சமூகத்தில் இகழ்ச்சிக்கு உண்டாகினர். இன்றைய கால கட்டத்தில் கூட மனைவிக்கு மரியாதை கொடுத்தால் அவனது ஆண்மைத்தன்மை (henpecked ) கேலிக்கு உள்ளாகிறது . இன்று பெண்களுக்கு சம உரிமை கிடைக்கிறது சமூகத்தில் ஆனால் அதே மரியாதை படிக்காத பெண்களுக்கும் இருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரியதே. வேலை பார்க்கும் பெண்கள் என்றால் அவர்கள் பேசினால் சம்பாதிக்கும் திமிர் என்று பேச்சு வருகிறது..சரி இருக்கட்டுமே தான் பிறர் உதவி இல்லாமல் வாழ்கிறோம் என்று ஒரு ஆணுக்கு மமதை இருக்கும்போது அது பெண்ணுக்கும் இருந்தால் என்ன தவறு ? அவளது திமிர் குணம் பிடிக்கவில்லை என்று சொல்லலாம் ஏன் என்றால் சக மனிதனிடம் இருக்கும் சில குணங்கள் பிடிக்காமல் போகலாம் ஆனால் வேலை பார்ப்பதால் தான் அந்த திமிர் என்பது சரியான வாதம் அல்ல .
இன்றும் கூட தங்கள் மகனுக்கு வெளியில் சாப்பிடும் உணவு ஒத்து போவது இல்லை என்பதற்காக சில பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஏன் என் அலுவலகத்தில் கூட எனக்கு கிடைக்கும் அறிவுரை திருமணம் செய்து பார் நல்ல ஆரோக்கியமான உணவு கிடைக்கும் என்பது.. இது திருமணத்தின் அவசியத்தையே கேள்விகுறியாக்குகிறது !!!!
வெளி உலகம் தெரியாமல் குடும்பப் பொறுப்பை மட்டுமே கவனித்து கொண்டு பல பெண்கள் இருக்கிறார்கள். ஏன் அதில் அவர்களுக்கு மகிழ்ச்சியும் உள்ளது. ஆனால் அவர்கள் மனதுக்குள் எத்தனை ஆவல்கள் புதைந்து கிடக்கின்றன? பணி புரியும் பலர் தங்களது தாயை அழைத்து வந்து இடங்களை சுற்றி காமிக்கும் போது அவர்களின் கண்களில் தெரியும் அந்த வியப்பு, இதுவரை பார்த்திராத கலாச்சாரம்,உணராத மகிழ்ச்சி என அவர்கள் மெதுவாக ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டு நடக்கும் போது கண்களில் கண்ணீர் வரத்தான் செய்கிறது.ஆனால் அவர்கள் மனதில் நினைப்பது தான் என்ன ?
பிழைக்க வழி இல்லை என்றால் ஒரு ஆண் தேர்ந்து எடுக்கும் பாதை கொலை.கொள்ளை, கடத்தல் இப்படி பல.ஆனால் ஒரு பெண் தேர்ந்து எடுப்பது விபச்சாரம், இதில் கூட மற்றவர்களுக்கு உபயோகமாய்த் தான் போகிறாள். பல பருவங்களிலும் பெண்களைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமாகத்தான் இருக்கிறது. எதிலோ படித்ததாய் ஞாபகம்
"பெண்ணைப் புரிந்து கொள்ள முயலாதே..அன்பு மட்டும் செய்" ..... முயற்சி செய்து பார்க்கிறேன்...
நன்றி
தரன்...